Sunday 30 January, 2011

ஆடுகளம்...


ஆள்காட்டி விரலில்
மையிட்ட அரசு
கூடவே தமிழனின் முகத்திலும்
கரியிட்டு அப்பியுள்ளது.

கடலோரக் காவல்
அந்நிய நாட்டின் அன்பில்...

கடலோடி வாழ்வு
இந்திய நாட்டின் அலட்சியத்தில்...

முள்ளிவாய்க்கால்
கொடுமை
ஈழத்தில் அன்று.

தள்ளியும் சுட்டும்
கொல்லும் கொடுமை
ஆழியில் இன்று...

அன்று
நம் இனம்
மாண்டழிந்த போது
குரலிட்டிருந்தால்...

இன்று
நம்
கைம்பெண் எண்ணிக்கை
குறைந்திருக்குமல்லவா?

அன்று அவன் நாட்டிலே
கொன்றான்...

இன்று நம் எல்லையில்
கொல்கிறான்...

நாளை நம் வீடு தேடி வந்து
கொல்வான்...

அன்றும் நமக்குத் தேவை...

ஞாயிறு படமும்,
நல்ல குத்துப் பாட்டும் தான்.

கடலோடி வாழ்வு
கேடாகிக் கிடக்கையில்
நமக்கு
மானோடு மயிலும்
சேர்ந்தாட வேண்டும்.

குரல் கொடுக்க
நமக்கும் நேரமேது?

அவருக்கும்
உண்ணாவிரதம் இருக்க
ஐந்து நிமிடம்
அகப்படவில்லை.

தமிழன் ஒரு
இழிபிறவி...

மீனவன் ...
அதனினும் இழிபிறவி.

1 comment:

  1. கொல்லான்...என்ன சொல்ல என்றே வார்த்தைகள் இல்லை.வேதனைகளை வார்த்தைகளால் நிரப்பி நிரப்பியே என்னை அழுவாச்சி என்கிறார்கள்.ஆனால் இன்னும் முடிவில்லை.தமிழன் சிரிக்க வழியேயில்லையா.காலம் கடந்த நீதிகூட அநீதையைவிடக் கொடுமைதானே !

    ReplyDelete