Tuesday 27 July, 2010

ஞாயிறு போற்றுக... ஞாயிறு போற்றுக...




அன்புடை மக்காள்,
யாவரும் கேளீர்!

என்றேனும் யோசித்ததுண்டா
ஓர் உயிரின்
உயிர் பிரியும் வாதையை?

அநேக ஞாயிறுகளில்
கையில் சிறு பையோடு
உயிர் பிரிந்த உடலை
வெட்டிக் கொண்டுபோகக்
காத்திருக்கும் கூட்டத்தில்
நீங்கள் இருந்ததுண்டா?

சதையை வெட்டி,
எலும்பை ஒதுக்கி,
குருதி ஒட்டிய
பிண்டப் பாதியின்
கடைசி நிமிடங்களை
என்றேனும் உணர்ந்திருக்குமா
அதை சமைத்துத்
தந்த பாத்திரங்கள்?

காலை மெட்டி
உடலைச் சாய்த்து
கழுத்தை அறுக்கையில்
மரண வலி கொண்டு
கூப்பாடிடும்
பாவ ஓலத்தைக்
கேட்டிருக்குமா
குருதி வெளியேற்றிய
கூராயுதம்?

தானும் வெட்டுண்டு
தன்மேல் வெட்டுப்படும்
கூறுகளின்
கையறு நிலையை
சிறு விநாடியேனும்
கருத்தில்
கொண்டிருக்குமா
மர முட்டுகள்?

கொண்டதில் இருந்து
கொடுத்தது போக
மீந்து தெறிக்கும்
சிதறல்களில் உள்ளதே
தனது உடலுக்குள்ளும் உண்டென
என்றேனும் எண்ணியிருக்குமா
கொண்டோடக் காத்திருக்கும்
தெருவோர நாய்கள்?

அந்தி முடிந்ததும்
மீந்ததை
சமைத்து சுவைக்கும்
அந்தக் கறிக்காரனுக்கு
கனவிலேனும் வந்திருக்குமா
வெட்டுப்பட்ட அந்த ஆட்டின்
குட்டியைப்போல்
தனக்கும் ஒரு குட்டி மகன்
வீட்டில் உண்டெனும் சிந்தனை?

Tuesday 20 July, 2010

வெட்சிப்பூ



வகையில் வெளியேறும் வாயோடு
சுளித்துக் கொண்டிருந்தன
சுமைகள்.

வருந்தி மோதும்
வாதத்தில்
கருத்த சூரியனின் கண்கள்.

பனியோடு பேசும்
கூர்மை மான்களின்
ஒப்பற்ற சிலேடை.

தாவி வரும்
தாளம் தரும்
தணியாத தகிப்பு.

கொம்போடு அலையும்
சூனியங்களின்
பார்வையற்ற நிலைப்பு.

நாப்பத்தி ஒம்போது
நாவுகளின்
நடனப் பிளவு.

கூர்மையற்ற
வெளிச்சங்களோடு
அபாயமாய் அழகு.

புதைந்த வெளிகளில்
புலர்ந்த பன்னீரில் தேம்பும்
இலக்கற்ற விண்ணின் தேம்பல்.

ஆதவனின் நிழல்
கொண்டாடும்
மைய வெறுப்பு.

சுழிய பந்தம் தேடிய
ஒப்பற்ற
கருநிலாக்கள்

பாடிய மௌனம்
பாடா ஓசை
கேளா நீட்சி.

அவையத்து முந்தீர்...

அனைத்தும் நீளின்
கொற்றனின் கூர்நிசி
கொடுவேல் ஆகுமோ?