Wednesday 29 September, 2010

ஆசுகவி


தமிழ்ப் புலவர்களின் வரிசையில் காளமேகம் ஒரு அற்புதமானவர்.
ஆசுகவி
(நொடிப் பொழுதில் பாடல் எழுதுபவர்), சிலேடை கவி (ஒரே பாடல் இரு பொருள்), நிந்தா ஸ்துதி கவி (வசை பாடுவது போல் இருக்கும் ஆனால் உட்பொருள் போற்றுவது இருக்கும்) போன்ற கவி வகைகளில் சிறந்து விளங்கியவர்.

தமிழிலக்கணத்தின் பலரும் தொட்டுப் பார்க்காத வகைகளை மிக அழகாகக் கையாண்டவர்.


வரதன் என இயற்பெயர் கொண்டவர்.


கோயில்
உதவியாளராக இருந்தவர்.

மோகனாங்கி
என்பவளிடம் அன்பு கொண்டு சைவ சமயம் சேர்ந்தவர்.

அம்பிகையின் அருளால் கவித்திறன் பெற்றவர்.
திருவானைக்கா உலா, மூவர் அம்மானை, சித்திர மடல், பரப்பிரம்ம விளக்கம் போன்ற பாடல் தொகுப்பை எழுதியவர்.

மற்றவர்கள் கொடுக்கும் குறிப்புகளுக்கேற்ப, வெண்பாக்களை நொடிப்பொழுதில் பாடி அசத்திக் காட்டுவார்.
இவரின் மிக அழகிய, நயமிக்க பாடல் சிலவற்றைக் காண்போம்.

தமிழின் "க' என்ற எழுத்து மட்டுமே கொண்ட பாடலை காளமேகத்தைப் பாடச்சொல்ல, காளமேகம் காண்பவர் ஆச்சர்யப்பட, பாடலை அருவியெனக் கொட்டுகிறார்.

காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா.
(கூகை - ஆந்தை. காக்கையானது பகலில் கூகையை (ஆந்தையை) வெல்ல முடியும். கூகையானது இரவில் காக்கையை வெல்லமுடியும். கோ எனும் அரசன் பகைவரிடத்திலிருந்து தம் நாட்டை இரவில் ஆந்தையைப் போலவும், பகலில் காக்கையைப் போலவும் காக்கவேண்டும். எதிரியின் பலவீனமறிந்து, கொக்கு காத்திருப்பது போல தக்க நேரம் வரும் காத்திருந்து தாக்க வேண்டும். தகுதியற்ற காலம் எனில் தகுதியான அரசனுக்குக் கூட (கைக்கு ஐக்கு ஆகா) கையாலாகிவிடக்கூடும்).

அதே போல 'த' எனும் எழுத்து மட்டும் கொண்ட பாடலை ஒருவர் பாடச் சொல்கிறார்.

தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி
துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது?

தத்தி தாவி பூவிலிருக்கும் தாதுவாகிய மகரந்தத் தூளை திண்ணும் வண்டே, ஒரு பூவினுள் உள்ள தாதுவை உண்ட பின் மீண்டும் ஒரு பூவினுக்குள் சென்று தாதெடுத்து உண்ணுகிறாய், உனக்கு (எத்தாது) எந்தப் பூவிலுள்ள தேன் (இனித்தது) தித்தித்தது?)


பெருமாளும் நல்ல பெருமாள்! அவர்தம்

திருநாளும் நல்ல திருநாள்! - பெருமாள்

இருந்திடத்தில் சும்மா
இராமையினால், ஐயோ!
பருந்துஎடுத்துப் போகிறதே பார்! ..


அப்பன் இரந்துஉண்ணி; ஆத்தாள் மலைநீலி;

ஒப்பரிய மாமன் உறிதிருடி; - சப்பைக்கால்

அண்ணன் பெருவயிறன்; ஆறுமுகத் தானுக்குஇங்கு

எண்ணும் பெருமை இவை..



வில்லால் அடிக்க செருப்பால் உதைக்க வெகுண்டுஒருவன்

கல்லால் எறியப் பிரம்பால் அடிக்கஇக் காசினியில்
அல்ஆர்
பொழில்தில்லை அம்பல வாணற்குஓர் அன்னைபிதா
இல்லாத
தாழ்வுஅல்ல வோஇங்ங னேஎளிது ஆனதுவே.



ஆலங் குடியானை ஆலாலம் உண்டானை

ஆலம் குடியான் என்று ஆர் சொன்னார்? - ஆலம்

குடியானே ஆயின் குவலயத்தோர் எல்லாம்

மடியாரோ மண்மீதிலே.



பூநக்கி ஆறுகால்; புள்இனத்துக்கு ஒன்பதுகால்;

ஆனைக்குக் கால்பதினேழ் ஆனதே; மானே! கேள்!

முண்டகத்தின் மீது முழுநீலம் பூத்ததுண்டு;

கண்டதுண்டு; கேட்டதில்லை காண்!



ஒன்றுஇரண்டு, மூன்றுநான்கு, ஐந்துஆறு, ஏழ்எட்டு

ஒன்பதுபத் துப்பதி னொன்று - பன்னிரண்டு
பதின்
மூன்றுபதி னான்குபதி னைந்து
பதி னாறுபதி னேழ்பதி னெட்டு.



வாரிக் களத்துஅடிக்கும் வந்தபின்பு கோட்டைபுகும்

போரில் சிறந்து பொலிவுஆகும் - சீர்உற்ற

செக்கோல மேனித் திருமலைரா யன்வரையில்

வைக்கோலும் மால்யானை ஆம்.



ஆடிக் குடத்துஅடையும் ஆடும்போ தேஇரையும்

முடித் திறக்கின் முகம்காட்டும் - ஓடிமண்டை

பற்றில் பரபரஎனும் பாரில்பிண் ணாக்கும்உண்டாம்

உற்றிடும்பாம்பு என்எனவே ஓது.



சுருக்குஅவிழ்ந்த முன்குடுமிச் சோழியா! சோற்றுப்

பொருக்குஉலர்ந்த வாயா! புலையா! - திருக்குடந்தைக்

கோட்டானே! நாயே! குரங்கே! உனைஒருத்தி

போட்டாளே வேலையற்றுப் போய்!



ஆண்டி குயவா! அடா!உன்பெண் டாட்டிதனைத்

தோண்டிஒன்று கேட்டேன் துரத்தினாள் -
வேண்டிஇரு
கைக்கரகம் கேட்டேன்நான் கால்அதனைத் தூக்கியே
சக்கரத்தைக் காட்டினாள் தான்!






இதை எல்லாம் படித்து விட்டு, தமிழ்ப் படப் பாடல்கள் உங்கள் நினைவுக்கு வந்தால், கம்பேனி பொறுப்பல்ல.

6 comments:

  1. காளமேகப் புலவர் பற்றிய பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  2. கொல்லான் நிறைய நாளுக்கப்புறம் தமிழ் மணக்க மணக்க அழகான பதிவு.என்ன....கொஞ்சம் விளங்கி கொஞ்சம் விளங்கேல்ல.ஆனால் திருப்பித் திருப்பிப் படிக்கும் ஆர்வம் வருகிறது.அப்படிச் சிலவரிகளை மட்டும் புரிந்துகொண்டேன்.சினிமாப்பாட்டு ஒன்றுமே ஞாபகத்தில வரல !

    ReplyDelete
  3. கவியரசி ஹேமா,
    உங்களுடைய பின்னூட்டங்கள் என்றுமே ஆர்வமூட்டுபவை.
    காளமேகத்தைப் படிக்கப் படிக்கத்தான் விளங்கும். பெரும்பாலும் இரு பொருள் தரும் கவிகளே.
    தங்களின் கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  4. ஆனந்தி,
    தங்களின் முதல் வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  5. உற்றிடும்பாம்பு என் எனவே ஓது.

    அது என் அல்லங்க எள் என்று நினைக்கிறேங்க

    ReplyDelete
  6. very very good post. tnx 4 sharing.:)

    ReplyDelete