
சித்தர்கள், சித்தர்கள் என்று கண்ட கண்ட கழிசடைகள் எல்லாம் சொல்லிக்கொண்டு உலா வருகிறார்களே, அந்த ஆசாமிகளில் ஒருத்தனுக்காவது சித்தர் என்றால் என்னவென்று பொருள் தெரிந்திருக்குமா?
டிவிக்களில் பல போலிகள் ''சித்தர்'' வேடம் தரித்து பலன் சொல்லுவதையும், நமது அப்பாவி பொது ஜனங்கள் வாயை திறந்து வைத்துக் கொண்டு அதைக் கேட்டு விட்டு கன்னத்தில் போட்டுக் கொள்வதும், அனேகமாக எல்லா வீடுகளிலும் நடப்பதே.
நமக்கும் கடவுளுக்கும் நடுவில் சாமியார்கள் என்ன புரோக்கர்களா?
புனிதமான ''சித்தர்'' என்ற பதத்தை உபயோகிக்க கூடிய தகுதி இன்றைக்கு யாருக்குமே இல்லை.
''சித்தர்'' என்ற சொல்லுக்கு உரிய இலக்கணங்கள் படி வாழ்வோடினைந்து பிறவா பேரின்ப நிலை அடைந்த ஒருவர் - சமீப காலத்தில் வள்ளலார் மட்டுமே.
''சித்தர்'' என்பது என்ன வகை? எப்படி வாழ்ந்தால் சித்தர் ஆகலாம்? ''சித்தர்கள்'' எப்படி இருப்பார்கள்? இன்ன பிற கேள்விகளுக்கும் அடுத்த பதிவில் தெளிவான மறுக்க முடியாத விளக்கங்களுடனும், தெளிவுரைகளுடனும் சந்திக்கிறேன்.
அது வரை நீங்களும் கீழ்க்கண்ட பாடலை படித்து பொருளுணர்ந்து கொள்ள முயலுங்கள்.
பாடல்களை படியுங்கள். ஞானம் வரட்டும். மங்களம் உண்டாகட்டும்.
''அஞ்செழுத்தி லேபிறந்து அவ்வஞ்செழுத்தி லேவளர்ந்து
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்.
அஞ்செழுத்தில் ஓர்எழுத்து அறிந்துகூற வல்லீரேல்!
அஞ்சல்அஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுமே!'' - சிவவாக்கியர்.
''இருக்கலாம் இருக்கலாம் அவனியில் இருக்கலாம்
அரிக்குமால் பிரமனும் அண்டம்ஏழு அகற்றலாம்
கருக்கொளாத குழியிலே காலிலாத தூணிலே
நெருப்பறை திறந்தபின்பு நீயும்நானும் ஈசனே! ''- சிவவாக்கியர்.
''மூலமாம் குளத்திலே முளைத்தெழுந்த கோரையை
காலமே எழுந்திருந்து நாலுகட்டு அறுப்பீரேல்
பாலனாகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம்;
ஆலம்உண்ட கண்டர்பாதம் அம்மைபாதம் உண்மையே!''- சிவவாக்கியர்.
''சட்டையிட்டு மணிதுலங்கும் சாத்திரச் சழக்கரே
பொத்தகத்தை மெத்தவைத்துப் போதமோதும் பொய்யரே
நிட்டைஏது ஞானமேது? நீரிருந்த அட்சரம்
பட்டைஏது? சொல்லீரே பாதகக் கபடரே?'' - சிவவாக்கியர்.
''காணவேண்டும் என்றுநீர் கடல்மலைகள் ஏறுவீர்
ஆணவம் அதல்லவோ அறிவில்லாத மாந்தரே?
வேணும் என்று அவ்வீசர்பாதம் மெய்யுளே தரிப்பிரேல்
தாணுவாக நின்ற சீவன் தான்சிவம் அதாகுமே. ''- சிவவாக்கியர்.
-----------------------------------------------------------------------------------