
நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
நீயும் நின் பெடையும், தென் திசைக்கு மரியாடி
வடதிசைக்கு ஏகுவீராயின்
எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி
பாடு பாத்திருக்கும் எம் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதிக் கூடலில்
ஆடையின்றி வாடையில் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்தி
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே''
என்ற சங்கப்பாடல் உங்களில் யாருக்கேனும் நினைவிருக்கலாம்.
சற்றே நினைவிருத்திப்பாருங்கள்.
பரிசில் வேண்டிஅரசனைப் பார்க்கச் சென்று கொண்டிருந்த - ஓய்வு எடுக்கும் போது இதனை இயற்றிய சத்திமுற்றப்புலவர், தனது காதல் மனைவிக்கு குறுஞ்செய்தியாக, தான் எப்படி இருக்கிறேன் என்பதை நாரை மூலம் தூதாக செய்தி அனுப்புகிறார்.
''நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி
பாடு பாத்திருக்கும் எம் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதிக் கூடலில்
ஆடையின்றி வாடையில் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்தி''
- அதாவது, மழையில் நனைந்திருக்கும் சுவரில் உள்ள பல்லி, 'ஏதாவது என் காதல் கணவனைப் பற்றிச் சொல்லும் என்று எதிர் பார்த்திருக்கும் எனது மனைவியைக் கண்டு , குளிரில், ஆடை குறைந்து கையது கொண்டு மெய்யது பொத்தி பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே என்றவாறு நானிருக்கிறேன் என்று சொல்லு.' என்கின்றார்.
இதே சூழலில் நான் முன்பொரு சமயம் இருந்து, பின் வீடு திரும்பி என் காதல் மனையாளைக் கண்டபின் அவள், என்னிடம் ஊடல் கொண்டாள்.
போன காரியம் முடியலியே (அவருக்கு முடிந்தது) , எப்படி என் காதல் மனையாளைக் கண் கொண்டு பார்ப்பது என்றெண்ணி, ஓர் ஓரம் அமர்ந்து (அவள் பெயரிட்டழைத்து) 'ஒரு தேனீர் கொடம்மா ' என்றேன்.
அவளுக்கும் தெரியும், இவன் எதுவும் கொணரவில்லையென.
கொணர்ந்திருந்தால், கூடிக் கொஞ்சியிருப்பேன் எனத் தெரியும்.
ஆனாலும் கொணர்ந்தாள்.
கொண்டு வந்து வைத்தாள்.
'நங்கென்று' உச்சி வானம் என் தலை மீது வந்து வீழும் ஓசை போல்.
அதிலும் தெரிந்தது, என் காதல் மனைவியின் ''காதல்"
காதல் வாழிய.